Saturday, January 4, 2020

நீங்கள் காலையில் எழுந்ததும், பத்திரிகையைப் படிப்பதன் காரணம் என்ன தெரியுமா..??? அவைகள், அந்த உணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறது.காலையில் எழுந்ததும், டீயையோ அல்லது காப்பியையோ அருந்துவதற்கு முன், அதைப் படிக்கவே ஆசைப்படுகிறீர்கள்.ஆனால்,அவைகளில் எந்தப் புதுமையும் இல்லை. அவைகளைக் கூர்ந்து கவனித்தால், பழைய செயல்கள்தான், இடம் மாறி, ஆள்மாறி வந்து கொண்டிருப்பதை அறிவீர்கள்.ஆனால் அது உங்களுக்கு ஒருவித திருப்தியைக் கொடுக்கிறது.
எங்கேயோ ஒருவன் கொல்லப்படுகிறான்,எங்கேயோ, யாரோ ஊழல் செய்கிறார்கள், எங்கேயோ திருட்டு நடக்கிறது.எவளோ ஒருத்தி, யாருடனோ ஓடிவிடுகிறாள்,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் மீண்டும், மீண்டும், காலையில் எழுந்ததும் தினந்தோறும் படிக்கிறீர். அப்பொழுது உங்களிடம் ஒருவித அமைதி ஏற்படுகிறது.நீங்கள் "இவைகளை யெல்லாம் பார்க்கும்பொழுது,நாம் எவ்வளவோ தேவலை.இந்த உலகம் கேவலமாகப் போய்க்கொண்டே இருக்கிறது.நாம் பிறர் மனைவி மேல் ஆசைப்பட்டு,அவளுடன் ஓடவில்லை,நாம் யாரையும் கொலை செய்யவில்லை,எதையும் திருடவில்லை சிலசமயம் அப்படி நினைத்திருக்கலாம்.நினைப்பது என்பது ஒரு பெரிய குற்றமா என்ன.....??? நாம் அந்த செயலை செய்யவே இல்லையே.... இப்படி உங்களையே நீங்கள் ஒப்பிட்டுக்கொண்டு சமாதானம் அடைவதற்குத்தான்,அந்தக் காலை பத்திரிகை உங்களுக்கு உதவி செய்கிறது.
அப்படி நீங்கள் அமைதி அடையும்பொழுது, உங்களிடம் எந்த மாற்றமும் ஏற்பட வழியில்லை.நீங்கள் பழையபடியேதான் இருப்பீர்கள்.அடுத்தவர்களைக் கவனிப்பதை ஒரு கட்டத்தில் விட்டுவிடுங்கள். அது தேவையற்றது.அதனால் உங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.உங்கள் சக்திதான் வீணாகச் செலவழிகிறது.
அதற்கு பதில்,உங்களையே நீங்கள் கவனிக்க முயலுங்கள்.அப்பொழுது உங்களிடம் ஒரு பெரிய மாற்றம் மெல்ல ஏற்படுவதை உணர்வீர்கள்.நீங்கள் உங்கள் கோபத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தால்,ஒரு நாள், அது திடீரென்று மறைவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஏனெனில், வெறுமனே பார்ப்பதில்,நீங்கள் அதற்கு எந்த சக்தியையும் கொடுக்கவில்லை.அப்பொழுது அது,ஒரு நாள் இறந்துதானே அல்லது மறைந்துதானே செல்ல வேண்டும்...???இதை மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி நீங்கள் உங்களைப் பார்ப்பதினால், உங்களிடம் உள்ள கெட்ட தன்மைகள் மறைந்து,நல்ல தன்மைகள் மேலும் வளர உதவி செய்யும்.அந்த கெட்ட எண்ணங்களுக்குப் போகும் சக்தி,இப்பொழுது நல்ல தன்மையை நோக்கித் தானாகவே செல்கிறது.அப்பொழுது அவைகள் உயிர்த்துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது.இப்படி உங்கள் துன்பங்கள் மறைய,இன்பங்கள் பெருக ஆரம்பிக்கின்றன.உங்கள் முகத்தில் எப்பொழுதும் ஒரு புன்னகை தவழும் சமயத்தில்,நீங்கள் எந்த காரணமும் இன்றி உரக்க சிரிப்பீர்கள்.அதாவது, உங்களுடைய சிரிக்கும் தன்மை இப்பொழுது அதிகமாகிறது.உங்களுடைய பழைய தொங்கும் முகத்தில்,இப்பொழுது ஒரு புதிய உயிரோட்டம், உங்கள் முகத்தில் ஒரு பொலிவும், அழகும் ஏற்படுகிறது.அப்பொழுது,நீங்கள் வாழ்க்கையை, விளையாட்டாக எடுத்துக் கொள்கிறீர்கள்.உங்களுடைய இறுக்கம் நிறைந்த மனம், இப்பொழுது இலேசாக இருக்கிறது.நீங்கள் மேலும், மேலும் ஒரு குழந்தையைப் போல் கள்ளம் கபடமற்ற தன்மையை அடைகிறீர்கள்.
எதை நீங்கள் பிரச்சனை என்று நினைக்கிறீர்களோ,அதை வெறுமனே பாருங்கள். அந்தப் பிரச்சனையின், பக்கத்தில் ஒரு மூன்றாவது மனிதனைப் போல நின்று கொண்டு பாருங்கள்.அது அங்கு உண்மையிலேயே இருக்கிறதா அல்லது நீங்களாக அதை உண்டு பண்ணிக் கொண்டதா என்று கவனியுங்கள்.அப்படி அதை நீங்கள் ஆழ்ந்து கவனிக்க, கவனிக்க,அது குறைந்து கொண்டே வந்து,ஒரு கட்டத்தில் மறைவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு, உங்கள் சக்தியை கவனித்தலில் செலவழிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு,அது சிறுத்துக்கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் அது இல்லாமலே ஆகிவிடும்.அப்பொழுது நீங்கள் மனம் விட்டுச் சிரிப்பீர்கள்.
ஆகவே, பிரச்சினை என்பது கற்பனையானது.சும்மா வெறுமனே, அதைச் சுற்றி வந்து நன்றாகக் கவனியுங்கள்.அதை ஒவ்வொரு கோணத்திலும் கவனியுங்கள்.அப்பொழுது அது ஒரு மாயப்பிசாசு என்பது புரியும்.நீங்கள் அதை விரும்புகிறீர்கள்.ஆகவேதான், அது அங்கு இருக்கிறது என்பது விளங்கும்.நீங்கள் அதை அழைத்தீர்கள்.அது உங்களிடம் வந்தது.அவ்வளவுதான்.
- ஓஷோ-தந்தரா அனுபவம்



Monday, October 8, 2018

உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கோங்க. நாம கேட்குற கேள்விக்கு டக்கு டக்குன்னு அதுல பதிலை எழுதிட்டு வாங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு போங்க.
அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ஓகே?
1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்..
2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களை ஒரு நாலு பேரை சொல்லுங்க பார்க்கலாம்…
3. சர்வதேச அளவுல நடக்குற அழகிப் போட்டிகள்ள ஜெயிச்ச இந்திய பெண்கள் (மிஸ் யூனிவர்ஸ்…மிஸ் வேர்ல்ட் இப்படி) ஒரு நாலு பேரை சொல்லுங்க….
4. #நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேரை சொல்லுங்க…..
5. கடைசியா #ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பேரை சொல்லுங்க பார்க்கலாம்…
உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே?
நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கல்லாம் சாதாரண சாதனையாளர்கள் அல்ல. அந்தந்த துறையில் உச்சத்தை தொட்டவர்கள். மிகப் பெரிய சாதனையாளர்கள். ஆனால்……? கைதட்டல்கள் காணாமல் போய்விடுகின்றன. சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன. விருதுகளும் பாராட்டுக்களும் அவர்களுடனேயே புதைந்து போய்விடுகின்றன.
இதோ மற்றொரு வினாடி வினா…
1) *உங்கள் பள்ளிக் காலத்தில் மிகச் சிறப்பாக பாடம் நடத்திய மூன்று #ஆசிரியர்களை சொல்லுங்கள்*.
2) *உங்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவிய மூன்று #நண்பர்களை சொல்லுங்கள்*…
3) *உங்களுக்கு வாழ்க்கையில் பயனுள்ளதை கற்றுக்கொடுத்த சிலர் பெயரை கூறுங்கள்*…
4) *உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய சிலரை பட்டியலிடுங்கள்*….
5) *நீங்கள் யாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகிறீர்களோ அவர்கள் பெயர்களை சொல்லுங்கள்*…
அட… விடைகளை பட் பட்டென்று எழுதிக் குவித்திருப்பீர்களே!!!..
இதிலிருந்து என்ன தெரிகிறது?
உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் பணக்காரர்களோ, புகழ்பெற்றவர்களோ அல்லது பாராட்டுக்களை குவித்தவர்களோ அல்ல. உங்கள் மீது அக்கறை செலுத்துபவர்களே. மற்றவர்களை மறக்கும் நீங்கள் இவர்களை மறப்பதில்லை.
பணம் பட்டம் பதவி இவற்றின் மூலம் பெரும் புகழோ வெற்றியோ நிலையானதல்ல. பிறருக்கு உதவி செய்து, பிறர் மீது அக்கறை கொண்டு ஒருவர் பெறும் புகழே வெற்றியே நிலையானது.
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரிடம் இப்படி கேள்விகள் கேட்டு, அவர்கள் ஒருவராவது விடையில் உங்கள் பெயரையும் சொல்லுவார்கள் என்றால்… நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம். (கேட்டுப் பாருங்களேன்!)
எனவே அடுத்தவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கவேண்டுமென்றால் ...
#கோவிலுக்கு போய் விழுந்து கும்பிட்டு #கடவுள் மனசுல இடம்பிடிக்கிறது இருக்கட்டும். முதல்ல நம்மை சுத்தி இருக்குற மனுஷங்க மனசுல நமக்கு இடம் இருக்கான்னு முதல்ல பார்ப்போம்*.
*கடவுள் தானா தன் மனசுல இடம் கொடுப்பார்*.
VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Friday, July 20, 2018

கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்

புகழ் பெற்ற சென்னை மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் அருகே,6 பழமையான ,அதிகம் அறியப்படாத சிவாலயங்கள் அருகருகே அமைந்திருக்கின்றன. இந்த 7 சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் முக்தி பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இவை அனைத்தும் மைலாப்பூர் அருகிலேயே இருப்பதால் 1 நாளில் தரிசனம் செய்ய முடியும்.
கபாலீஸ்வரரும் ஆறு சிவாலயங்களும்
மயிலாப்பூர் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது, அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்தான். ஆனால், கபாலீஸ்வரர் கோயிலை வழிபடுவதற்கு முன்பாக, மற்ற ஆறு கோயில்களையும் தரிசித்து வழிபட்ட பிறகுதான், நிறைவாக கபாலீஸ்வரர் கோயிலை தரிசித்து வழிபடவேண்டும். ஒரே நாளில் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்பதற்கான வழிமுறைகளையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள்.
இந்த ஏழு கோயில்களுமே கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஶ்ரீராமரும் முருகப்பெருமானும் இந்தக் கோயில்களுக்கு விஜயம் செய்தபோது, அவர்கள் வழிபட்ட முறையில்தான் இன்றைக்கும் வழிபடும் மரபு உள்ளது என்பது இப்பகுதி ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த முறையிலேயே நாமும் இந்த ஏழு சிவாலயங்களையும் தரிசிப்போம்.
காரணீஸ்வரர்
1) ஶ்ரீகாரணீஸ்வரர் கோயில்:
இத்திருக்கோயில் சென்னை மாநகரில் மயிலாப்பூர் பகுதியில் கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும், பஜார் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் அருள்மிகு மாதவப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
12 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் பிற்காலச் சோழர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்ற சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். உலகத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் ஈசனே காரணம் என்ற பொருளில் இங்குள்ள இறைவன் ஶ்ரீகாரணீஸ்வரர் என்ற திருப்பெயர் கொண்டு அருள்புரிகிறார். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இந்த அம்பிகையை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் செழித்துச் சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தீர்த்தபாலீஸ்வரர்
2) ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்:
மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் வழியில் நடேசன் சாலையில் தீர்த்தபாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. மாசிமாத தீர்த்த நீராட்ட விழாவின் போது கடலுக்குள் ஏழு சிவாலயங்களில் இருந்து எழுந்தருளும் சுவாமிகளில், தீர்த்தபாலீஸ்வரருக்குத்தான் முதல் தீர்த்த வைபவம் நடைபெறுவதால், இந்த ஈஸ்வரருக்கு தீர்த்தபாலீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது.
அத்ரி முனிவரும் அகஸ்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம் ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில். சப்த சிவாலயங்களில் இந்தக் கோயில் இரண்டாவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். பண்டைக் காலத்தில் இங்கு 64 வகையான தீர்த்தக்குளங்கள் அடுத்தடுத்து இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தத் தீர்த்தங்கள் தெய்வீக சக்தி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு வந்தன. மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்கு முன்பாக இந்தக் கோயிலில் இருந்த தீர்த்தக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறும்.
வெள்ளீஸ்வரர்
3) ஶ்ரீவெள்ளீஸ்வரர் கோயில்:
மயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே இருக்கும் இந்த வெள்ளீஸ்வரர் கோயில், சிவனுக்கும் காமாட்சிக்கும் உரிய திருத்தலமாக அமைந்துள்ளது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட திருத்தலம் இது. மகாபலி யாகத்தின்போது, வாமனனாக வந்த விஷ்ணு மூன்றடி நிலம் தானம் கேட்டபோது, வந்திருப்பது மகா விஷ்ணு என்றும் தானம் கொடுக்கவேண்டாம் என்றும் குரு சுக்கிராச்சாரியார் தடுத்தார். ஆனாலும், மகாபலி தானம் கொடுக்க முன்வரவே, வேறு வழி இல்லாமல் சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி தாரை வார்க்க முயன்ற மகாபலியின் கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு நீர் வெளியில் வராமல் அடைத்துக் கொள்கிறார்.
வழிபடும் முறை
வாமனனாக வந்த விஷ்ணு தன் தர்ப்பை மோதிரத்தால் குத்த, கமண்டலத்தில் வண்டாக இருந்த சுக்கிராச்சாரியாரின் கண்பார்வை போய்விடுகிறது. சுக்கிராச்சாரியார் இந்தத் தலத்துக்கு வந்து ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டு கண்பார்வை பெற்றதாக தலவரலாறு. எனவே, ஶ்ரீவெள்ளீஸ்வரரை வழிபட்டால் கண் தொடர்பான நோய்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வெள்ளீஸ்வரரை 'கண் டாக்டர்' என்றே கொண்டாடுகிறார்கள்.
விருபாக்ஷீஸ்வரர்
4) ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயில்:
மயிலை கடைவீதியில் (பஜார் சாலை) இருக்கும் காரணீஸ்வரர் கோயிலுக்கு அருகில்தான் ஶ்ரீவிருபாக்ஷீஸ்வரர் கோயிலும் உள்ளது. சப்த சிவ வழிபாட்டில் நான்காவதாக வழிபட வேண்டிய கோயிலாகும். விசாலாட்சி அம்பாள் உடனுறையாக விருபாக்ஷீஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். இங்கு விசாலாட்சி அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள பலிபீடம் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகின்றது. பைரவர் சந்நிதியும் சூரியனார் சந்நிதியும் அம்பாளின் சந்நிதிக்கு அருகிலேயே உள்ளன. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்த போது இறைவன் அவரது திருவுளப்படி நடராஜத் தாண்டவத்தைக் காண்பித்து அருளினார். மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் ஜீவசக்தியை வழங்கும் வல்லமை வாய்ந்த கோயிலாக இந்தக் கோயில் திகழ்கின்றது. நமது மனம், உடல், இதயம் ஆகிய மூன்றையும் இணைத்து ஆத்ம பலம் அளிக்கும் ஆலயமாகத் திகழ்கின்றது.
வாலீஸ்வரர்
5) ஶ்ரீவாலீஸ்வரர் கோயில்:
‘மயிலாப்பூரின் காவல் தெய்வம்' என்றுகூறப்படும் கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இருக்கிறது ஶ்ரீவாலீஸ்வரர் கோயில். மரங்கள் அடர்ந்து நிழல் பரப்பி நிற்க, குளிர்ச்சியான சூழலில் ஶ்ரீபெரியநாயகி சமேதராகக் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு வாலீஸ்வரர். இந்தக் கோயில் 2000 வருடங்களுக்கும் முந்தையதாகக் கருதப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட சிறப்புக்கு உரியது இந்தக் கோயில். ராமாயண காலத்தில் வானரர்களின் அரசனான வாலி, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டுத்தான் பல வரங்களைப் பெற்றான். வாலி வழிபட்டதால்தான் இறைவன் வாலீஸ்வரர் என்னும் திருப்பெயர் பெற்றார். நிலத்தில் இருந்து வெளிப்பட்ட பஞ்சலிங்கங்கள் இந்தக் கோயிலின் பிரத்தியேகமான சிறப்பாகும். 5-வதாக வழிபடவேண்டிய கோயில் இது.
மல்லீஸ்வரர்
6. ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில்:
மயிலாப்பூர் கடைவீதி (பஜார் சாலை)யில் காரணீஸ்வரர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்திருக்கிறது ஶ்ரீமல்லீஸ்வரர் கோயில். மல்லிகை மலர்ச் செடிகள் நிறைந்திருந்த பகுதி என்பதால், இங்கே கோயில் கொண்ட இறைவனுக்கும் மல்லீஸ்வரர் என்றே திருப்பெயர் அமைந்திருக்கிறது. அம்பிகையின் திருநாமம் ஶ்ரீமரகதவல்லி. பிருகு முனிவர் வழிபட்ட தலம் இது. மரகதவல்லி சமேத மல்லீஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுவதுடன், பிள்ளைகளும் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 6-வதாக வழிபடவேண்டிய ஆலயம் இது.
கபாலீஸ்வரர்
7. ஶ்ரீகபாலீஸ்வரர் கோயில்:
மயிலையின் நாயகனாக, அருள்மிகு கற்பகாம்பிகை சமேதராக அருள்புரியும் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலே நாம் நிறைவாக தரிசிக்கவேண்டிய ஆலயமாகும். கபாலீஸ்வரரை காஸ்யப முனிவர் வழிபட்டதாக தலவரலாறு சொல்கிறது. திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது. சிவபெருமான் மேற்கு பார்த்து எழுந்தருளி இருக்கும் திருத்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்று. ஆதியில் இருந்த கபாலீஸ்வரர் கோயில் கடலில் மூழ்கிவிட்டதாகவும், பிறகு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு இப்போது உள்ள இடத்தில் கோயில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர்.
புன்னை மரத்தினடியில் எழுந்தருளி இருந்த இறைவனை, அம்பிகை மயில் வடிவம் கொண்டு பூஜித்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. மயிலையின் சப்த சிவஸ்தலங்களில் 7-வதாகவும், நிறைவாகவும் தரிசிக்கவேண்டிய தலம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில்.
இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், 'மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்ற சிறப்பைப் பெற்றது போலும்.

VINAYAKAA VASTU
VASTU CONSULTANT
B.V. SUBRAMANI
9884437677

Friday, June 29, 2018

தீங்கு திரும்பி வரும்.நன்மை நான்கு பேரை அழைத்து வரும்.

மிகச்சிறந்த ஆசிரியர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் (தெய்வசிகாமணி) ஆசிரியர்கள் அனைவருக்கும் நனறி

பள்ளி மைதானத்தில் #மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆசிரியர் #தெய்வசிகாமணி அந்தப் பக்கமாக வந்தார். அவர் ஒரு மாற்றுத் திறனாளி.

அவர் தூரமாக வரும்போதே, மாணவன் சுரேஷ், ‘டேய்... அங்க பாருங்கடா யார் வர்றதுன்னு’ என்று கூறிவிட்டு காலில் ஊனம் இருப்பதுபோல நடந்து காட்டினான். மற்ற மாணவர்கள் எல்லாம் சிரித்தனர். ஆசிரியரோ கண்டும் காணாமல் சென்றுவிட்டார். இது வழக்கமாக நடந்து வந்தது.

வீட்டில் ஒரே பையன் என்பதால் சுரேசிற்கு செல்லம் அதிகம். அதனால் அதிகமாக குறும்புகள் செய்வான். பெற்றோரும் அவனைக் கண்டிப்பதில்லை. விளையாட்டுப் பிள்ளையாக இருந்தலும், சுரேஷ் நன்றாகப் படிப்பான். பள்ளி முடித்து கல்லூரிக்குச் சென்ற பின்னும் அவனது கலாட்டா குறைவில்லை.

ஒரு நாள் கல்லூரிக்குச் சென்று திரும்பிய #சுரேஸ், படுக்கைக்குப் போனான். அசதியில் தூங்கியவன் மறுநாள் எழுந்திருக்கவில்லை. உடலில் ஜூரம் கொதித்தது. உடனே ஆஸ்பித்திரியில் சோர்த்து சிகிச்சை அளித்தனர்.

பக்கவாதம் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் கூறினர். இறுதியில் ஒரு கால் நடக்க முடியாமல் போய்விட்டது. அதனால் கல்லூரிக்குச் செல்ல வெட்கப்பட்டுக் கொண்டு சுரேஷ் வீட்டிலேயே முடங்கிவிட்டான்.

‘ஆசிரியரை நாம் எப்படியெல்லாம் கேலி செய்தோம். அதற்குச் சரியான தண்டனைதான்’ என்று எண்ணிக் கொண்டான்.

சுரேஷ் நிலையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆசிரியர் தெய்வசிகாமணி, சுரேஷைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். படுக்கையில் கிடந்த சுரேஷைப் பார்த்துப் பேசினார்.

‘சுரேஷ், எப்படி துருதுருன்னு விளையாடிக்கிட்டு இருப்பே. இப்போ இப்படி முடங்கிவிட்டாயே. பள்ளியில் படிக்கும்போது நீதான் என்னைக் கேலி செய்யும் மாணவன் என்பது எனக்குத் தெரியும். அது அறியாப் பருவம். எனக்கு உன்மேல் கோபம் கிடையாது.

ஆனால் நீ இப்படி முடங்கிக் கிடப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. உடல் ஊனம் ஒரு குறையே அல்ல. ##மனம் ஊனம் அடைந்தால் தான் ஆபத்து. எனக்கும் உன்போலதான் திடீரென்று இப்படியானது. இதோபார் நான் உன் முன் ஆசிரியராக நிற்கிறேன். உன்னாலும் முடியும். முதலில் நீ வெட்கப்படுவதை விட்டுவிட்டு கல்லூரிக்குச் சென்று படி, மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.

நாம் இவரை எவ்வளவோ கேலி செய்திருக்கிறோம். ஆனால் அவர் நம்மை ஊக்கப்படுத்திவிட்டு செல்கிறாரே, என்று எண்ணியவன், ஆசிரியர் தெய்வசிகாமணியை தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவரது அறிவுரைப்படி கல்லூரிக்குச் சென்றான். கல்லூரிப் படிப்புக்குப் பின் ஆசிரியப் படிப்பையும் முடித்தான்.

ஆனால் உடனே வேலை கிடைக்கவில்லை. சிறிது காலம் டயூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தான். ஆசிரியர் தெய்வசிகாமணி, தன் பதவிகாலம் முடிந்ததும் தனது வேலையை சுரேசுக்கு கொடுகக்குமாறு அதிகாரிகளிடம் பரிந்துரைத்து அவ் வேலையை வாங்கிக் கொடுத்தார்.

இப்போது சுரேஷ் அதே பள்ளியில் ஆசிரியராக வேலையில் சோர்ந்தான்.

“ஆசிரியரை கேலி செய்த நினைவுகளும், அவரே குருவாக மாறிப்போன நினைவுகளும் அவன் நெஞ்சில் அவ்வபோது வந்து போகும். ஆனால் இப்போது யாரையும் விளையாட்டுக்கு கூட கேலி செய்வதில்லை.

இப்படி ஒரு ஆசிரியர் கிடைத்தால் எல்லா மாணவர்களும் உலகம் போற்றும் நபராக நிச்சயமாக திகழ்வார்கள்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் தங்களது பொற்பாதங்களில் எனது நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன்.

VINYAKAA VASTU
B.V.SUBRAMANI
9884437677

Wednesday, May 16, 2018

ஆறுதலே கூற முடியாத சில கஷ்டங்களுக்கு நிச்சயமாக அழுகை ஒரு மருந்தாக இருக்கும்....

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை...நாளும் அது புரிவதில்லை

₹ பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

₹ நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ....

₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட ...,இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ....

₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,மனஅமைதியையும் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

₹ இனி எதற்கும் "ஏன்" என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ....
அதற்கும் ... "ஏன்" என்று தான் கேட்பாள் இந்த பெண் .

₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ...15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

₹ வேலை இல்லாதவனின் பகலும்,நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

₹ வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

₹மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால் ...அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

₹ எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

₹ இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,வாழ் நாட்கள் போதாது ....ஏனெனில் ...இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

₹ பூனையை விட சிங்கம் வலிமையானது என்று எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

₹ தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

₹ சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து  உனைசீரழிக்கும் துரோகியைவிட ...
 முறைத்துக்_கொண்டே - உன் முன்னிருக்கும் எதிரி_மேலானவன் !.....

₹ அவ்வளவு எளிதாக யாரிடமும் இருந்து பிரிந்து விட இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில் கொஞ்சம் ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

₹ உனக்காக... தன் மீதான நியாயமான வாதத்தைக்கூட நிறுத்திக் கொள்ளும் பெண் கிடைத்தால் ஒருபோதும் இழந்து விடாதே..

₹ அலைகளில் கால்களை நனைக்கும் சுகம்,கப்பலில் கடல் நடுவில் பயணப்படும்போது கிடைப்பதில்லை...

₹பேரின்பம் வேண்டாம்...சிறுசிறு சந்தோஷங்கள் போதும் வாழ்வை அனுபவிக்க.........

₹ நூறு பேரின் வாயை மூட முயற்சிப்பதை விட நம் காதுகளை மூடிக்கொள்வது மிகச் சிறந்தது......

£ வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

£ புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
 எல்லா "பிரச்சினைகளுக் கும் இந்த வாய் காரணம்..!!!

£ அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க முடியாது.....

£ வாழ்வோடு போராடிச் சாவதிலும் சாவோடு போராடி வாழ்வதிலுமே...
வாழ்க்கை முடிந்துவிடுகிறது...!!

அருமையான வாக்கியங்கள்........ எனக்கு வந்தவை.......உங்களுடன் பகிர்கிறேன்........

VASTHU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Monday, May 7, 2018

இறைவனிடம் எதை கேட்கவேண்டும்

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான். வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி  எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம்  அவனை நிலை தடுமாற செய்தது.

இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.
அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்டையை எப்படியோ மீட்டு எடுத்து கரையை அடைந்தான்.
" இந்த பண மூட்டையை காப்பாற்ற சொல்லி யாரோ கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் ? நான் உங்கள் பண மூட்டையை மீட்டுக்கொண்டு வந்துவிட்டேன். வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டு அழைத்தான். ஆனால் வெகு நேரம் ஆகியும் யாரும் அதை பெற வரவில்லை.

பிறகுதான் அவனுக்கு புரிந்தது, அந்த பண மூட்டைக்கு சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் என்று. "ஐயோ பாவம், அந்த பணக்காரர் இந்த பண மூட்டைக்கு பதிலாக தன்னை காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரை காப்பாற்றி இருப்பேனே" என்று அந்த மீனவன் வருந்தினான்.

இப்படிதான் நாமும் நம் தேவைகளை சில நேரங்களில் இறைவனிடம் சரியாக கேட்காமல் வெறும் பணத்தை மட்டுமே கேட்கிறோம். அதனால் பல நேரங்களில் நாம் நம் வாழ்வில் உயிருக்கு சமமான நிம்மதியை இழக்க நேரிடுகிறது.

VASTU CONSULTANT
B.V.SUBRAMANI
9884437677

Thursday, March 22, 2018

உங்கள் ஆசையின் படைப்பாளி நீங்கள்.

உண்மையில் இங்கே எதுவுமில்லை.
எல்லாம் ஆசையிலும் கனவிலும் இருப்பவை.
உங்கள் ஆசையால் நீங்கள் படைத்தது அது.
உங்கள் ஆசையின் படைப்பாளி நீங்கள்.
பலவாக உள்ள உலகைப் படைத்தது நீங்களே.
ஒரு கார் இருக்கிறது. அழகான கார்தான். ஆனால், இந்தப் பூமியில் மனிதரே இல்லையென்றால், அந்தக் காருக்கு என்னதான் மதிப்பு?
அதைப் பாராட்டப் போவது யார்? அதைப் பற்றிக் கவலைப்படப் போவது யார்?
பறவைகள் அதைப் பார்க்குமா? விலங்குகள் அதைக் கவனிக்குமா? யாரும், எதுவும் கவனிப்பாரற்று அது ஓட்டை உடைசலாய் மாறிவிடும்.
மனிதன் இருந்தால் தான் அதற்கு மதிப்பு.
அந்த மதிப்பு எங்கிருந்து வருகிறது? உங்கள் ஆசையிலிருந்து வருகிறது. நீங்கள் ஆசைப் பட்டால்தான் அதற்கு மரியாதை.
நீங்கள் ஆசைப்படவில்லை என்றால், அதன் மதிப்பீடு மறைந்து விடும். மதிப்பு, அந்தப் பொருளில் இல்லை.
உங்கள் ஆசையில் இருக்கிறது.
பொருளாதாரத்தின் பழைய விதி, "விநியோகம், தேவையைப் பொருத்தே அமைகிறது" என்பது.
இந்த விதி, இப்போது முற்றிலும் மாறி விட்டது. "விநியோகம் செய்யுங்கள். தேவை வந்து விடும்!"
வியாபாரி, புதிய புதிய பொருள்களைக் கண்டுபிடித்து, விளம்பரப்படுத்தி, புதிய ஆசைகளைத் தூண்டிக் கொண்டே இருப்பான்.
ஒவ்வொரு ஆண்டும் புதிய மாதிரி கார்கள், புதிய மாதிரி வீடுகள் தோன்றும். உங்களுக்கும் புதிய இலட்சியங்கள் தோன்றி விடும்.
தொடர்ந்து, நீங்கள் வெளிதிசை நோக்கியே செல்லும் படியான புதிய தேவைகளை, பொருள்களை, உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்.
சிந்தித்துப் பார்க்க ஒரு சிறு இடைவெளி கூட அவர்கள் கொடுப்பதில்லை.
--ஓஷோ--
Vastu Consultant
B.V.Subramani
9884437677